அமெரிக்காவினால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட Beechcraft King Air 360ER விமானமானது அடுத்த வாரம் இலங்கையை வந்தடையும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் Building Partner Capacity நிகழ்ச்சித்திட்டத்தினால் நிதியளிக்கப்பட்ட, 2019இல் ஆரம்பிக்கப்பட்ட இந்நன்கொடையானது இலங்கை விமானப் படையுடன் காணப்படும் நீண்டகால ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், போதைப்பொருள் தடுப்பு மற்றும் கடத்தல் மற்றும் கள்ளக்கடத்தலை முறியடித்தல் ஆகிய விடயங்களில் இலங்கையின் திறன்களை அதிகரிக்கும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நன்கொடையானது அமெரிக்க இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பினை மேலும் வலுப்படுத்தும் அதேவேளை இந்நாட்டின் கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் இது கணிசமாக மேம்படுத்தும்.
மேலும் இது அமெரிக்க அரசினால் வழங்கப்படும் 19 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியுடைய விமானம் என்றும் கூறப்படுகின்றது.