யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சர்வதேச மட்டத்தில் கரிசனை அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சம்மர் லீயும் (Summer Lee) தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில், செம்மணியில் நூற்றுக்கும் மேற்பட்ட என்புக்கூடுகள் மட்டுமன்றி, குழந்தையின் பால் போத்தல், பாடசாலை புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற கண்டுபிடிப்புகள் பாதிக்கப்பட்டவர்களின் நீதி கோரிக்கைகளை வலுப்படுத்துவதாகவும், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இதற்கு முன்னர் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரும் தங்களின் எக்ஸ் தளப்பதிவுகள் ஊடாக செம்மணி சம்பவம் குறித்து ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்தநிலையில், சம்மர் லீ தமது பதிவில், “நாம் தொடர்ந்து சுயாதீன விசாரணையை வலியுறுத்த வேண்டும். அதுவே நீதியை நோக்கி நகரும் பாதை” எனக் குறிப்பிட்டுள்ளார்.