சீரற்ற காலநிலை மேலும் மோசமடையும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையில்  நிலவும் குறைந்த வளிமண்டலக் குழப்பநிலை காரணமாக, இன்று (25) முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பிற பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பிற பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கு மேல் மிதமானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மணிக்கு 40 கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.