இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரூ பிரஞ்ச் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் ஆளுநரால் மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் முன்னுரிமைத் தேவைகள் குறித்த விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
முக்கியமாகக் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய ஆளுநர், கடந்த காலப் போர்ச் சூழல் காரணமாகப் பலரது காணி ஆவணங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன.
தற்போது மக்களிடமும் காணி ஆவணங்கள் இல்லை, அரச திணைக்களங்களிடமும் அதற்கான பதிவுகள் இல்லை. இதனால் தமது காணிகளுக்கான உரித்துகளை உறுதிப்படுத்த முடியாமல் மக்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
இப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி மக்கள் தொடர்ச்சியாகப் பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள் மற்றும் ஆளுநர் செயலகத்துக்கும் அதிகளவில் வருகை தருகின்றனர்.
எனவே, அவர்களின் காணிப் பிணக்குகளைத் துரிதமாகத் தீர்த்து, உரிய காணி உரித்துகளை வழங்க வேண்டியது எமது மிக முக்கிய தேவையாகும். இதற்காக அரசாங்கம் ஏற்கனவே ‘ஹிமிகம’ (உரிமை) திட்டத்தையும் ஆரம்பித்துள்ளது,’ எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர், வடக்கு மாகாணத்தின் தனித்துவமான உணர்திறன்களையும் சவால்களையும் ஆளுநர் மிகவும் நுட்பமாகக் கையாளுவதைப் பாராட்டினார்.



