இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே இரு தரப்பு கடன் உடன்படிக்கை!

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே இரு தரப்பு கடன் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெற்றிக் (Andrew Patrick) மற்றும் இலங்கை நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இலங்கை, பாரிஸ் கிளப் (Paris club) நாடுகளின் கடன் வழங்குநர்களுடன் 2024ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொண்ட கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகளில் கீழ் இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் இருதரப்பு கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் மகிழ்ச்சியடைவதாகவும், இது கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான முக்கிய மைல்கல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த செயற்பாட்டின் ஊடாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற முடியும் என்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெற்றிக் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 2028 ஆம் ஆண்டில் இருந்து அசல் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது.