அரசாங்கத்தினால் வெளியிடப்படாத உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பது குறித்த தகவல்களை எதிர்வரும் 31ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தவுள்ளதாக பிவிதுரு ஹெல உருமயவின் தலைவரும், சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். சுமார் ஒன்றரை வருட காலமாக முன்னெடுக்கப்பட்ட நீண்ட ஆய்வின் அடிப்படையில், ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடி’ எனும் ஆய்வு நூல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த நூல் மார்ச் 31ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு கொழும்பு ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி மாளிகையில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த 07 வருடங்களாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் அரசியலுக்காக விற்கப்பட்டு வருகின்றது.
இதனை வைத்து அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன, கலைக்கப்பட்டன. ஆனால், எந்தவித அடிப்படையும் இன்றிஇராணுவத்தினரை துன்புறுத்துவதற்கு இந்தத் தாக்குதல் பயன்படுத்தப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வைத்து முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலம் தற்போது வந்துள்ளது என்றும் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
உண்மையான சூத்திரதாரி யார் என்பதை ஆதாரங்களுடன் பகிரங்கப்படுத்துவோம் என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.



