திருகோணமலை: கடற்கரையில் அமைக்கப்பட்ட சட்டவிரோத சிற்றுண்டிச்சாலை அகற்றம்

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக இயங்கி வந்த சிற்றுண்டிச்சாலையின் சட்டவிரோத கட்டுமானம் அகற்றப்பட்டு தற்காலிக அனுமதிக்கு ஏற்றவாறு கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையினுடைய விகாராதிபதியின்  கோரிக்கைக்கு அமைவாக 127 சதுர அடியில் தற்காலிக கடை ஒன்றை அமைப்பதற்கு மட்டுமே கரையோர பாதுகாப்பு திணைக்களம் அனுமதி வழங்கி இருந்தது இருப்பினும் குறித்த அனுமதியை பயன்படுத்தி 405 சதுர அடி பரப்பளவு கொண்ட நிரந்தரக் கட்டிடம் மற்றும் மூன்று கூடுதல் குடிசைகள், நிரந்தர வேலி ஆகியவை அனுமதி பெறாது அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இவற்றை அகற்றுமாறு குறித்த திணைக்களத்தினால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வந்ததுடன் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையினையும் கடந்த வருடம் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி மேற்கொண்டிருந்த நிலையில் குறித்த விகாராதிபதி துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு சென்று அவர்கள் ஊடாக கரையோர பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒருவாரகால அவகாசம் கேட்டதுடன் அனுமதி இன்றி அமைக்கப்பட்டிருந்த மூன்று கூடுதல் குடிசைகளை அகற்றியிருந்தார்கள்.

இதன்பின்னர் 19.11.2025 அன்று குறித்த சட்டவிரோத கட்டடம் அகற்ற திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் நவம்பர் மாதம் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் விகாரைக்கான கட்டுமானங்கள் அமைக்கப்பட்டு புத்தர்சிலை வைத்து குறித்த விடயம் சர்ச்சையாகியிருந்ததுடன் குறித்த விடயம் திசைமாற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த சட்டவிரோத சிற்றுண்டிச்சாலை தொடர்பில் அன்றைய திருகோணமலை நகரசபையால் திருகோணமலை நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதன் பின்னர் கொழும்பு நீதிமன்றில் விகாராதிபதியால் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் அங்கு இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.