ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் வடக்கு – கிழக்கில் முழுச்சுதந்திரத்துடன் செயற்பட்டோம். தற்போதைய, அரசின் ஆட்சியில் அவ்வாறு செயற்பட முடியாதுள்ளது – இவ்வாறு தெரிவித்துள்ளார் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்னதேரர்.
தற்போது நடப்பவற்றைப் பார்த்து, துயரத்தின் உச்சத்தால் சுவரில் தலையை அடித்தேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
நாட்டில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், எப்படியான சவால்கள் வந்தாலும் எமது நாட்டின் வீரம் மிகுந்த தலைவர்கள் தொடர்பிலும், சிரேஷ்ட தலைவர்கள் தொடர்பிலும் நாங்கள் கதைப்போம். ஏனெனில் பௌத்த சாசனத்தை அவர்கள் பாதுகாத்துள்ளனர். மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்திலும், கோத்தாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திலும் எமக்கு எவரிடமும் அடிபணிய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கவில்லை. வடக்கு, கிழக்கில் முதுகெலும்புடன் செயற்பட்டு பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தோம்.
அதேபோல், தொல்லியல் இடங்களை பாதுகாப்பதற்குரிய வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தோம். ஆனால் தற்போது அவற்றின் மீதான பிடிமானங்களை இழந்துள்ளோம். இது தொடர்பாகக் கதைக்கும்போது எம்மை அரசாங்க எதிர்ப்பாளர் என்று கூறுகின்றனர். சில கட்சிகளுக்குச் சார்பாகச் செயற்படுகின்றோம் என்றும் விமர்சிக்கின்றனர். நடப்பவற்றைப் பார்த்து துயரம் தாங்க முடியாது, தலையை சுவரில் அடித்துக்கொண்டேன். நான்கு நாள்கள் மருத்துவமனையில் இருந்தேன். ஆனால் வழுக்கி விழுந்தேன் என பொய்கூறினேன். துயரம் தாங்காது தலையை சுவரில் அடித்துக்கொண் டேன் என்பதே உண்மை. அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்கான உரிமையை அரசாங்கம் எமக்கு வழங்க வேண்டும்-என்றார்.