பயங்கரவாத தடைச் சட்டம் வெகுவிரைவில் இரத்தாகும் – அமைச்சர் விஜித ஹேரத் உறுதி

‘மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய பயங்கரவாத தடைச்சட்டத்தை வெகுவிரைவில் இரத்துச் செய்வோம்’ என்று வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (22) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘காலாவதியாகியுள்ள அரசியலமைப்பை இரத்துச் செய்து மக்களின் விருப்பத்துடன், புதிய அரசியலமைப்பை நிச்சயம் உருவாக்குவோம்’ என்றும் அவர் கூறியுள்ளார். ‘தேசிய நல்லிணக்கம், ஜனநாயகம் ஆகியவற்றை ஸ்திரப்படுத்துவோம்’ என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

‘பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையடைந்த அரசாங்கத்தையே பொறுப்பேற்றோம்’.
‘பொருளாதார மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன’. ‘அடையாளப்படுத்தப்பட்டுள்ள இலக்கு திட்டங்களை அமுல்படுத்தியுள்ளோம்’. ‘எதிர்க்கட்சிகள் கலக்கமடைந்துள்ளதை கண்டு அரசாங்கம் கலக்கமடைய போவதில்லை’.  ‘மக்களுக்க வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுவோம்’.  ‘வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களும், பெருந்தோட்ட மக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்கள்’. ‘ஆகவே அந்த மக்களின் ஆணைக்கமைய செயற்படுவோம்’ என்று வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ‘புதிய அரசியலமைப்பு தொடர்பில் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்’ ‘காலாவாதியடைந்துள்ள இந்த அரசியலமைப்பை இரத்துச் செய்து பொதுஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்’ என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
‘நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது’.

‘குழுவின் அறிக்கைக்கு அமைய இந்தச் சட்டம் இரத்துச் செய்யப்படும்’.
‘அதேபோன்று நிகழ்நிலை காப்புச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது’ என்று வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.