வெளிநாட்டில் வைத்து கே.பியை கைது செய்து இலங்கைக்கு கொண்டுவந்தபோது ஊடகக் கண்காட்சி காண்பிக்கப்படவில்லை. எனினும், செவ்வந்தி விடயத்தில் அவ்வாறு நடப்பது தவறான அணுகு முறையாகும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரசன்ச தெரிவித்தார்.
வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டுவரப்படும் குற்றவாளி விமானத்தில் இறங்குவது முதல் எல்லா தகவல்களும் மிகவும் சுவாரஷ்யமாக ஊடகங்களில் வெளியாகின்றன. ஊடகக் கண்காட்சி காண்பிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள், இதைவிடவும் பயங்கரமான குற்றவாளிகளை வெளிநாட்டில் கைது செய்து அழைத்துவந்துள்ளன. உதாரணம் கே.பி என்பவரை கைது செய்து நாட்டுக்கு கொண்டுவந்தபோது, அவர் எப்படி வந்தார் என்பதுகூட யாருக்கும் தெரியாது. எனவும் விமல்வீரவன்ச குறிப்பிட்டார்.
செவ்வந்தி விடயத்தில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை பார்க்கும்போது, பிரபலமாவதற்கு இதுதான் வழி என்ற தவறான உணர்வு சிறார்கள் மத்தியில் ஏற்படக்கூடும். எமது நாட்டு விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளில் சென்று பதக்கங்கள் வென்றுவரும்போது, அவற்றுக்கு ஏன் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. நான் ஊடகங்களை குற்றஞ்சாட்டவில்லை. பொலிஸார் இதனை ஊடகக் கண்காட்சியாக்கியுள்ளனர், என விமல்வீரவன்ச மேலும் குறிப்பிட்டார்.