அரசாங்கம் இதுவரையில் திட்டமிட்ட மின் துண்டிப்பு எதனையும் நடைமுறைப்படுத்தவில்லை என்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். தற்போதைய மின்வெட்டு குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (07) சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் குமார ஜயகொடி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் சில இடங்களில் தினமும் ஒரு மணித்தியாலம் அல்லது சில மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.
அவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் அது குறித்து மக்களுக்கு முறையாக ஏன் அறிவிக்கப்படவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர், மக்களைத் தவறாக வழிநடத்தும் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டாம் என்றும், மின்சாரத் தடைகள் அவ்வப்போது ஏற்படுவது நாட்டு மக்களுக்குப் புதிய விடயமல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய காலத்திற்கு இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்படுவதை ‘மின்வெட்டு’ என்று அழைக்காமல், ‘மின்சாரத் தடை’ என அழைப்பதே பொருத்தமானது என்றும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.



