வனவளத் திணைக்களம் மக்களிடமிருந்து களவாடிய காணிகளை உடனடியாக விடுவிக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். மான்னார் – முசலி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 15.01.2025இன்று இடம்பெற்றது.
இக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முசலிப் பிரதேசசெயலகப்பிரிவில் பெருமளவான மக்களின் காணிகள் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளதாக கிராமமட்ட பொது அமைப்புக்களால் குறித்த கூட்டத்தில் முறையீடுசெய்யப்பட்டது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை முசலிப் பிரதேசசெயலகத்தால் மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதியுடன் வனவளத் திணைக்களத்திடமிருந்து 3510ஏக்கர் காணிகளும், வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்து 1110ஏக்கர் காணிகளும் விடுவித்துத் தரும்படி கோரப்பட்டுள்ளதாகவும் இதன்போது முசலிப் பிரதேசசெயலாளரால் சுட்டிக்காட்டப்பட்டது.
குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பிரதேசசெயலர்,கிராமஅலுவலர், காணி உரிமையாளர்களுக்குத் தெரியாமல், வனஇலாகா தமது எல்லைக்கற்களை இட்டு மக்களின் காணிகளை அபகரித்துவருகின்றது. அத்தோடு வனஜீவராசிகள், தொல்லியல் திணைக்களத்தினர், படையினர் என பல்வேறு திணைக்களங்களும் இவ்வாறு எமது மக்களின் காணிகளை அபகரிப்புச்செய்யும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதில் மிக அதிகளவான மக்களின் காணிகளை வனவளத்திணைக்களம் அபகரித்துள்ளது. இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் அரசதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும், அதேபோல் நாம் இது தொடர்பில் ஜனாதிபதியுடனும், உரிய ஏனைய தரப்புக்களுனும் பேசத் தயாராக இருக்கின்றோம். வனவளத் திணைக்களத்தின் அபகரிப்புச் செயற்பாடே மிக மோசமாகக் காணப்படுகின்றது. எனவே வனவளத்திணைக்களம் மக்களிடமிருந்து திருடிய காணிகளை முதலில் விடுவிக்கப்படவேண்டும் – என்றார்.



