போர்க்காலத்தை விட அச்சுறுத்தலில் நாடு!

போர்காலத்தில் புலிகள் கூட அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளைக் கொலை செய்யவில்லை. போர்க்காலத்தை விடவும் தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது படுபயங்கரமாகும். தமக்கு பாதுகாப்பு வேண்டுமென துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அது வழங்கப்படாத சூழ்நிலையிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நாட்டில் 30 வருடகாலம் போர் நிலவியது. இந்தக் காலப்பகுதியில் புலிகள் கூட இவ்வாறு அச்சமின்றி அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளைக் கொல்லவில்லை. ஆனால் ஜே.வி.பி. ஆட்சியின்கீழ் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளது. இது ஜனநாயகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகும். நாட்டை அராஜக நிலைக்கு கொண்டு செல்வதற்காக பாதாளக்குழு என்ற போர்வையில் தமக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றதா? என்ற சந்தேகம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மக்கள் நாய், பூனைகள் போல சுட்டுக்கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது. பாதாளக் குழுக்களை ஒடுக்குகின்றோம் என்ற போர்வையில் அந்தக் குழுக்கள் பலப்படுத்தப்படுகின்றனவா? என்ற சந்தேகமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது -என்றார்.