மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கு அரசாங்கத்துக்கு எவ்வாறு அழுத்தம் பிரயோகிப்பது என்பது பற்றி ஆராயும் நோக்கில் தமிழ்த்தரப்புக்களால் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புக்களில் பங்கேற்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்துக் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பு எனில் அதில் பங்கேற்பது குறித்து கட்சியே தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இழுத்தடிப்புச் செய்யப்பட்டுவரும் மாகாணசபைத் தேர்தல்கள் விரைவில் நடாத்தப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் பங்கேற்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அக்கட்சியின் சார்பில் எவரும் சந்திப்பில் பங்கேற்றிருக்கவில்லை. அதனையடுத்து தனிப்பட்ட சில காரணங்களால் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் அக்கூட்டத்தில் பங்கேற்காமைக்கான காரணம் குறித்து சுமந்திரனிடம் வினவியபோது, அக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்குத் தம்மால் முடியாது போனதாக குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கு அரசாங்கத்துக்கு எவ்வாறு அழுத்தம் பிரயோகிப்பது, அதனை முன்னிறுத்தி மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஏற்கனவே கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய தமிழ்த்தரப்புக்களால் இந்த நோக்கத்துடன் ஒழுங்குசெய்யப்படும் கலந்துரையாடல்களில் பங்கேற்போம் என்றும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.