வெல்வேரி காணிகள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – வெளிவிவகார பிரதி அமைச்சர் உறுதி

WhatsApp Image 2026 01 04 at 13.36.01 2 வெல்வேரி காணிகள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – வெளிவிவகார பிரதி அமைச்சர் உறுதி

திருகோணமலை வெல்வேரி பகுதியில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுடைய காணிகளை விரைவில் அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர உறுதியளித்தார்.

இன்று ஞாயிற்றுக்கழமை (04) வெல்வேரி கிராமத்திற்கு கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்ட பின்னரே அவர் இதனை தெரிவித்தார்.

திருகோணமலை – வெல்வேரி கிராமத்தில் பல தசாப்த காலமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வாழ்ந்து வந்த மக்கள் நாட்டில் ஏற்பட்ட தொடர்ச்சியான வன்செயல் காரணமாக உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அங்கிருந்து தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து மீள குடியமர்ந்து வந்தனர்.

இந்நிலையில் 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து பாதுகாப்பின் காரணமாக மீண்டும் மீள குடியமர அனுமதிக்கப்படாத நிலையில் 2010ஆம் ஆண்டுக்கு பின்னர் குறித்த பகுதியில் வன வள பாதுகாப்பு திணைக்களத்தினால் எல்லைக் கற்கள் இடப்பட்டு கையகப்படுத்தப்பட்டிருந்தது.

பின்னர் குறித்த காணி ஹெட்டியாராய்ச்சி என்ற நபருக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது எனினும் அவர் அதில் எந்தவொரு நடவடிக்கையினையும் இதுவரை மேற்கொண்டிருக்கவில்லை.

1970 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே 30க்கு மேற்பட்ட குடும்பங்கள் அப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், வன வள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பகுதிக்குள் தாங்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்களாக வீட்டின் சிதைவுகள், சீமேந்தால் கட்டப்பட்ட சுமார் 10 அடி விட்டமுடைய பல கிணறுகள், நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்பட்ட கால்வாய்கள் உட்பட பல ஆதாரங்களும் தமது காணிக்கான ஆவணங்களும் வைத்திருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் தமது காணியைச் சுற்றியுள்ள ஏனைய பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் குறுகிய பரப்பளவைக் கொண்ட தமது காணிகள் மாத்திரம் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.