மனித உரிமைகள் தொடர்பில் பிரிட்டனுக்கு எதிராக சீனாவின் ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இலங்கை அரசு கையெழுத்து இட்டுள்ளமை கண்டிக்கத் தக்க விடயமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் விசனத்தை வெளிப் படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சீனாவால் முன்வைககப் பட்டிருக்கும் தீர்மானத்தை இலங்கை ஆதரித்தமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப் பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:-
“இலங்கை அரசின் இந்த நடவடிக்கை கொரோனாத் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டத்தையும் பாதிக்கும். பிரிட்டன் தம்மிடம் மேலதிகமாக உள்ள ஒக்ஸ்போர்ட் – அஸ்ரா செனகா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்குப் பகிர்ந்தளிக்க உறுதி கொண்டுள்ள நிலையில், அரசு இவ்வாறான தோர் அறிக்கையில் கையொப்பம் இட்டுள்ளது.
இவ்வாறான செயற் பாடுகள் மூலம் நாட்டின் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை ஆபத்தில் தள்ளிவிட வேண்டாம் என்று அரசிடம் கேட்டுக் கொள்கின்றோம். இதே வேளை, சிலரது கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்குத் தடுப்பூசிகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தி விட வேண்டாம் என்று பிரிட்டனிடம் கேட்டுக் கொள்கின்றோம்” என்றுள்ளது.