தண்டிக்கப்படாத இலங்கையின் கடந்தகால மீறல்கள் காஸாவில் நிகழும் இன்றைய மீறல்களுக்கான முன்னோடி – மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

இலங்கையில் 16 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்து, இன்னமும் தண்டிக்கப்படாமல் உள்ள சம்பவங்கள்,   காஸாவில் நிகழ்த்தப்படும் மீறல்களுக்கும், அங்கு பிரயோகிக்கப்படும் உத்திகளுக்குமான முன்னோடியாக உள்ளன என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப்பிராந்திய பிரதிப்பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி  தெரிவித்துள்ளார்.

இத்தகைய பின்னணியில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் இன்றியமையாததாகும். அது இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மாத்திரமன்றி, உலகெங்கிலும் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை சவாலுக்கு உட்படுத்துவதற்கு மிக அவசியம் என  மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவரால் எழுதப்பட்டிருக்கும் கட்டுரையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உலகளாவிய ரீதியில் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பல அட்டூழியங்கள் குறித்த ஞாபகங்கள், சில வருடங்களில் வேறு புதிய மீறல் சம்பவங்களால் மாற்றி எழுதப்படும். ஆனால் மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அதனால் ஏற்பட்ட துயரம் என்பது முடிவற்றதாகும். தீர்வளிக்கப்படாத குற்றங்கள் அதனையொத்த எதிர்கால மீறல்களுக்கான முன்மாதிரியாகத் திகழ்கின்றன.

இலங்கை அரசாங்கத்தினால் 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது. அதன்விளைவாக ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சபையினால் கண்டறியப்பட்டதன் பிரகாரம் அப்போரில் ஈடுபட்ட இருதரப்பினராலும் சட்டங்களுக்குப் புறம்பான விதத்தில் மனிதகுலத்துக்கு எதிராக மிகமோசமான குற்றங்கள் இழைக்கப்பட்டன. இருப்பினும் அவை இன்றளவிலே இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் சிலரால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களுக்கான எந்தவொரு எதிர்விளைவும் இல்லாததன் காரணமாக இது சாத்தியமாகியிருக்கின்றது.

இலங்கையில் இதுவரை ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதாக வாக்குறுதியளித்துவிட்டு, அதிலிருந்து விலகிச் செயற்பட்டுவந்திருப்பதன் மூலம், எதனைச் செய்தாலும் பின்விளைவுகளின்றி மீண்டுவிடலாம் என்பதைக் காண்பித்துவந்திருக்கின்றன. ஆகையினாலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பொறுப்புக்கூறலைத் தொடர்ந்து வலியுறுத்துவதுடன் இலங்கையினால் நிகழ்த்தப்பட்ட சர்வதேசக் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுவதற்குரிய ஆணையை இம்மாதம் ஜெனிவாவில் நடைபெற்றுவரும் 60 ஆவது கூட்டத்தொடரில் மீளப்புதுப்பிக்கவேண்டும்.

இலங்கையில் சுமார் 26 வருடகாலமாக நீடித்த உள்நாட்டுப்போரின்போது பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், சட்டவிரோத படுகொலைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் என்பன உள்ளடங்கலாக இருதரப்பினராலும் மிகமோசமான மீறல் குற்றங்கள் இழைக்கப்பட்டன. இறுதிக்கட்டப்போர் இடம்பெற்ற சில மாதங்களில் எஞ்சியிருந்த விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களும், தமிழ் பொதுமக்களும் இலங்கை இராணுவத்தினால் மிகக்குறுகிய பகுதிக்குள் சுற்றிவளைக்கப்பட்டனர்.

விடுதலைப்புலிகள் பொதுமக்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்திய அதேவேளை, இலங்கை இராணுவம் மனிதாபிமான உதவிகள் உட்செல்வதைத் தடுத்ததுடன் குறித்த சில பகுதிகள்மீது வான் மற்றும் ஆட்டிலறி தாக்குதல்களை நடாத்துவதற்கு முன்னர் அவற்றை ‘யுத்த சூனிய வலயங்களாக’ அறிவித்தன. மருத்துவ சேவை வழங்கல்கள் தொடர்ந்து இலக்குவைக்கப்பட்டன. இலங்கையில் 16 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்து, இன்னமும் தண்டிக்கப்படாமல் உள்ள இச்சம்பவங்கள், இன்றளவிலே காஸாவில் நிகழ்த்தப்படும் மீறல்களுக்கும், அங்கு பிரயோகிக்கப்படும் உத்திகளுக்குமான முன்னோடியாக உள்ளன.

ஜே.வி.பி எழுச்சி மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்துடனான யுத்தம் என்பவற்றுடன் தொடர்புபட்ட விதத்தில் நாடளாவிய ரீதியில் இதுவரை சுமார் 20 மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் வேறு பணிகளின்போது தற்செயலாகவே கண்டறியப்பட்டன. அண்மையில் அடையாளம் காணப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழியில் 1990 களில் இராணுவக்காவலின்கீழ் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என நம்பப்படும் 200 க்கும் மேற்பட்டோரின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இருப்பினும் போதிய தொழில்நுட்ப வசதிகள் இன்மை மற்றும் அரசியல் தன்முனைப்பு இன்மை போன்ற காரணங்களால் இதுவரையில் இலங்கையில் எந்தவொரு மனிதப்புதைகுழி தொடர்பிலும் விசாரணைகள் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் இன்றியமையாததாகும். அது இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மாத்திரமன்றி, உலகெங்கிலும் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை சவாலுக்கு உட்படுத்துவதற்கு அவசியமாகும் என வலியுறுத்தியுள்ளார்.