இலங்கை ஏற்றுமதிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 30வீத வரியைக் குறைக்கும் நோக்கத்தை மையப்படுத்தி, இலங்கையின் உயர்மட்ட குழு ஒன்று அமெரிக்காவுக்கு புறப்படவுள்ளது.
முக்கிய அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களை உள்ளடக்கிய இந்தக் குழு ஓகஸ்ட் 1ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் இருந்து புறப்பட திட்டமிட்டுள்ளது. வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கும் அமெரிக்க சந்தைக்கு செல்லும் இலங்கைப் பொருட்களுக்கு மிகவும் சாதகமான விதிமுறைகளை கொண்டு வருவதற்குமான, இராஜதந்திர முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமைகிறது.
மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர். அத்துடன் அமெரிக்க வரி நிவாரணத்தைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு நிபுணர் குழுவின் உறுப்பினர்களும் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.இதற்கிடையில் அமெரிக்காவின் திருத்தப்பட்ட வரிக்கொள்கை ஓகஸ்ட் முதலாம் திகதியில் இருந்துஅமுலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.