இலங்கையின் நிதிக் கையிருப்பு 1.6 பில்லியன் டொலர்களாக குறைவடைந்துள்ளது. இது ஒரு மாதத்திற்கான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யவே போதுமானது என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறப்பு கையாளும் கையிருப்பு 127 மில்லியன், தங்கம் 382 மில்லியன் மற்றும் நிதிக் கையிருப்பு 1.1 பில்லியன் டொலர்களே தற்போது இலங்கையின் கையிருப்பாக உள்ளது. இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட 554 மில்லியன் டொலர்களும் அமெரிக்க டொலர்களாக மாற்றப்பட்டு விட்டன.
இந்த கையிருப்பில் சீனாவிடம் இருந்து பணப் பரிமாற்றமாக பெறப்பட்ட 1.5 பில்லியன் டொலர்கள் உள்ளடக்கப்படவில்லை.
பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர்களில் பணத்தை செலுத்த முடியாத நிலையில் இலங்கை உள்ளதால், பால்மா போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கூட கப்பலில் இருந்து இறக்க முடியாத நிலை உள்ளதாக பால்மா இறக்குமதி சபை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும், எனவே நிதி அமைச்சு டொலர்களைத் தரவேண்டும் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது.