இலங்கைக்கு ரஷ்யாவிலிருந்து மசகு எண்ணெய் கிடைப்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலை நீடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான போக்குவரத்து மற்றும் ஏனைய ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்கள் இன்னும் நிறைவடையாத நிலையில், அமெரிக்கா வழங்கிய ஒரு மாத கால தடையில்லா விலக்கு எதிர்வரும் 11ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளமையே இதற்கு முக்கிய காரணமாகும்.
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் சூழல் மற்றும் உலக எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீத பங்களிப்பை வழங்கும் ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டமை ஆகியவற்றால் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியைத் தவிர்க்க இலங்கை அரசாங்கம் ரஷ்யாவின் உதவியை நாடியிருந்தது.
இதனை முன்னிட்டு, ரஷ்யாவின் இரண்டு முக்கிய பிரதி அமைச்சர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இதன்போது, அமெரிக்க நலன்களுக்கு அப்பாற்பட்டு இலங்கையுடன் நீண்டகால எரிசக்தி ஒத்துழைப்பை வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். எவ்வாறாயினும், அதற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை அடையாத நிலையில் ரஷ்யாவில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்வது தாமதமடைவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கை தனது வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்காவிலிருந்து மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்ய முன்பதிவு செய்துள்ளது. இந்த எண்ணெய் கப்பல் எதிர்வரும் மே மாதம் நாட்டை வந்தடையும் என்று இலங்கை கனியவள கூட்டுத்தாபன அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தக இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் ,WTI மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்ய இலங்கை தீர்மானித்துள்ளது. இதுவரை காலமும் இலங்கை அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்திடமிருந்து ‘முர்பன்’ (Murban) ரக எண்ணெய்யையே இறக்குமதி செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.



