சவுதிஅரேபியாவில் இலங்கை பணிப்பெண்ணிற்கு கைகால்களில் ஊசிகுத்தி சித்திரவதை

இலங்கையின் நுவரேலியாவின் லிந்துலவை சேர்ந்த வீரன் சிவரஞ்சியினியின் சவுதி அரேபியாவில் பணிபுரிந்த வீட்டில் அவர் அனுபவித்த சித்திர வதைகள், நவீன கால அடிமைத்தனம் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பேரழிவிலிருந்து மீள்வதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை மத்தியகிழக்கில் பணிபுரியும் இலங்கை பெண்கள்அந்நிய  செலவாணிக்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர்.அவர்கள் அனுப்பும் மில்லியன் கணக்கான பணம் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த உதவுகின்றது.

எனினும் இவர்களில் பலருக்கு தங்கள் குடும்பத்தினருக்காக சிறந்த வாழ்க்கை என்ற கனவு மிகவும் பயங்கரமானதாக மாறிவிடுகின்றது,அவர் நவீன கால அடிமைத்தனம் என தெரிவிக்ககூடிய சூழ்நிலைகளில் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

சவுதி அரேபியாவில் வீரன் சிவரஞ்சியினி பணிபுரிந்த இடத்தில் அவர் மிகமோசமாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். உடலில் ஊசிகளை செலுத்தி சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.

ஒன்பது நாள் மிகமோசமான சித்திரவதையின் பின்னர் சிவரஞ்சினி இன்னுமொரு இலங்கையரின் உதவியுடன் அந்த வீட்டிலிருந்து வெளியேறி சவுதிஅரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

மருத்துவபரிசோதனையின்போது ஐந்து நீளமான ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நுவரேலியாமாவட்ட மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.காலிலில் இருந்த இரண்டு ஊசிகளை சத்திரகிசிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

ஒரு குழந்தையின் தாயாரான சிவரஞ்சினி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம் ஜூன் 17ம் திகதி சவுதிஅரேபியா சென்றுள்ளார்.கடும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே சவுதிஅரேபியா செல்வதற்கு தீர்மானித்ததாக அவர்  தெரிவித்துள்ளார்.

நான் சவுதிஅரேபியாவில் அந்த வீட்டிற்கு சென்ற முதல்நாளில் இருந்து என்னை துன்புறுத்தினார்கள் அவர்களுடைய மொழி எனக்கு தெரியாது என சிவரஞ்சினி தெரிவித்துள்ளார்.

நான் ஒருவாரகாலம் அங்கு வேலைபார்த்தேன் பெரும்கொடுமைகளை அனுபவித்தேன் எனது பிள்ளைக்காக அவற்றை சகித்துக்கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

கழிவறையை சுத்தம் செய்வதற்காக ஏணியில் ஏறியவேளை நான் கீழேவிழுந்தேன் தலையில் அடிப்பட்டது மயக்கம்;வந்தது,நான் என்னை சவுதிஅரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அனுப்பிவிடுங்கள் நான் இலங்கைக்கு செல்கின்றேன்  என தெரிவித்தேன் ஆனால் அவர்கள் அதனை ஏற்கமறுத்து என்னை அடித்தார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் மூன்றுவருடங்கள் வேலைபார்ப்பதற்கு சம்மதம் என தெரிவிக்கும் கடிதத்தில் எனது கைவிரல் அடையாளத்தை பெற முயன்றனர் நான் மறுத்ததால் அவர்கள் கோபமடைந்து ஊசிகளால் எனது கை கால்களில் குத்தினர் நான் என்னை சித்திரவதை செய்யவேண்டாம் என கதறினேன் ஆனால் அவர்கள் செவிமடுக்கவில்லை என சிவரஞ்சினி தெரிவித்துள்ளார்.