2022 ஆம் ஆண்டு தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியின் பின்னரான மீட்சி மற்றும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளியை அடுத்து உருவாகியிருக்கும் சவால்கள் என இலங்கை மாறுபட்ட சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்திருக்கும் பின்னணியில், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை (16) இலங்கைக்குப் பயணம் செய்தார்.
இந்த பயணத்தின் போது நடாத்திய சந்திப்புக்களின் ஓரங்கமாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (17) மத்திய வங்கிக்கு விஜயம் செய்த அவர், அங்கு ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் சந்திப்பையும் நிகழ்த்தினார்.
இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்புரிமையைப் பெற்று 75 வருடங்கள் பூர்த்தியடைவதுடன், இலங்கை மத்திய வங்கியும் அதன் 75 வருடப்பூர்த்தியை நினைவுகூரும் இவ்வேளையில் இடம்பெற்ற நாணய நிதியப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவாவின் விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது.
அதேவேளை இங்கு ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின் கீழ் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவாவும் அவரது குழுவினரும் இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்கும், கடன்மறுசீரமைப்பு செயன்முறையை முழுமையாகப் பூர்த்திசெய்வதற்கு அளித்த வலுவான ஒத்துழைப்புக்கும், மிகமோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு உதவியமைக்கும் ஆளுநர் மனமார்ந்த நன்றியை வெளிப்படுத்தினார். அதேபோன்று நாணயக்கொள்கை, நிதியியல் துறை கொள்கை உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய தொழில்நுட்ப உதவிகளுக்கும் ஆளுநர் நன்றி தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் எனக் குறிப்பிட்டார்.
அத்தோடு பொருளாதார நெருக்கடியை அடுத்து பெரும்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதில் மத்திய வங்கி கொண்டிருந்த வகிபாகத்தையும் அவர் அங்கீகரித்தார்.
மேலும் அண்மைய சில வருடங்களில் இலங்கை மீண்டும் மீண்டும் பல்வேறு பின்னடைவுகளுக்கு முகங்கொடுத்திருப்பினும், அவசியமான கட்டமைப்பு மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு, அவை தொடர்ந்து பேணப்படும் பட்சத்தில், நாடு மிக உயர்வான வளர்ச்சியை அடையும் என நம்பிக்கை வெளியிட்டார்.



