யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி வளாகத்தில் நடைபெற்று வரும் விசாரணை தொடர்பான விரிவான அறிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் குறிப்பிடத்தக்க சவால்கள் தொடர்பில் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், நீதி அமைச்சர், பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சர், இராணுவத் தளபதி, உயர்கல்வி அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோருக்கு 16 அம்ச பரிந்துரைகளையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அறிக்கையில் முன்வைத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் பணியின் போது, புதைகுழி தளம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவத் துறை மற்றும் காணாமல் போனோர் அலுவலகம், நீதிபதி, தடயவியல் நிபுணர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் சந்திப்புகள் இடம்பெற்றமை தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையிடும் காலப்பகுதியில், 200க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டதுடன், முதற்கட்ட விசாரணைகளில் 90 வீதத்திற்கும் மேற்பட்ட சடலங்கள் நீதிக்கு புறம்பான கொலைகளைக் குறிக்கும் வகையில் புதைக்கப்பட்டிருந்தன என்பதைக் எடுத்துக்காட்டுவதாகவே அமைந்துள்ளதென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதுமான தடயவியல், மானுடவியல் மற்றும் தொல்பொருள் நிபுணர்கள் இல்லாமை, மேம்படுத்தப்பட்ட கார்பன்-டேட்டிங் முறைகளுக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் மற்றும் மரபணு பகுப்பாய்வில் உள்ள சவால்கள் உள்ளிட்ட நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் முக்கிய இடைவெளிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளதாகவும், தனது அறிக்கையில் கூறியுள்ளது.
நிதியுதவியில் தாமதங்கள் மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளால் ஏற்படும் மிரட்டல்கள், பொறுப்புக்கூறல் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.
இதனிடையே, குறித்த அறிக்கையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முக்கிய பரிந்துரைகள் சிலவற்றை முன்வைத்துள்ளது.
அதன்படி, மனித புதைகுழி விசாரணைகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை உருவாக்குதல், மேம்பட்ட தடயவியல் தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு நிபுணத்துவத்தைப் பெறுதல், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரபணு வங்கியை நிறுவுதல், அரச அதிகாரிகளால் இழைக்கப்பட்ட கடுமையான குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடுப்பதற்கான ஒரு சுயாதீன அலுவலகத்தை உருவாக்குதல் போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சாட்சிகள் அல்லது ஊடகப் பணியாளர்களை அச்சுறுத்தப்படுவது தவிர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
விசாரணையை திறம்பட நிறைவு செய்யவும், புதைக்கப்பட்டு என்புக்கூடுகளாக மீட்கப்பட்டவர்களில் குடும்பங்களுக்கு நீதியை உறுதி செய்யவும் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் அவசரத் தேவையையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.