அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை வேளை பயணித்த வேன் ஒன்று பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பயணித்த நிலையில், அதனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்று (12) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
அதன்போது, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் சார்பில் 6க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகினர்.
சிறுவனின் கொலை தொடர்பில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் திருப்தி இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அதற்கு பொலிஸ் தரப்பில் கடுமையான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் கடுமையான வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன.
இருதரப்பினரின் சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதவான் விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு மாற்றுமாறு உத்தரவிட்டார்.



