இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு காலனாமார். இந்த தகவலை கம்யூனிஸ்ட் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

ஆர்.நல்லகண்ணு (வயது 101) உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வயது மூப்பின் காரணமாக அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது. வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு அங்கு வைத்தியர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், நல்லகண்ணு சிகிச்சை பலனின்றி காலமானார்.

முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் பிற்பகல் 1.55 மணிக்கு காலமானதாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தூத்துகுடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெரும்பத்துர் எனும் கிராமத்தில் 1925 டிசம்பர் 26 ஆம் திகதி பிறந்தவர் ஆர். நல்லகண்ணு.

பாடசாலை பருவத்திலேயே பாரதியாரின் பாடல்கள் மீது ஈடுபாடு கொண்டவர்.

18 ஆவது வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். நெல்லை சதி வழக்கில், 27 வயதில் கைது செய்யப்பட்டு சித்ரவைக்குள்ளாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் விடுதலை செய்யப்பட்டபோது, நாடும் விடுதலை பெற்றிருந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக 13 வருடங்கள் செயலாற்றியவர். விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும் இருந்தவர்.

விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் ஈடுபட்டு வாழ்நாளில் பெரும்பகுதியை போராட்டம், சிறை வாழ்க்கை என வாழ்ந்தவர்.