நல்லூர் கந்தன் ஆலய வளாகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதற்கமைய, ஆலய வளாகத்திலும், அதனை அண்மித்தப் பகுதிகளிலும் சி.சி.ரி.வி காணொளிகள் ஊடாக கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் குறிப்பிட்டுள்ளது.
நல்லூர் வருடாந்த மகோற்சவத்தில் நேற்று (18) முதல் எதிர்வரும் ஐந்து நாட்கள் விசேட உற்சவங்கள் இடம்பெறவுள்ளன.

அதற்கமைய நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பெருந்திரளானவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். உற்சவத்தில் கலந்துக் கொள்ளும் அடியார்களின் பாதுகாப்பின் நிமித்தம் அதிக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களில் இருந்தும் சிவில் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஆலய வளாகத்திற்குள் பிரவேசித்து திருட்டுச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதால், அவ்வாறானவர்களை கண்காணிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்

அத்துடன், கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்ட விசேட சி.சி.ரி.வி வாகனம், கண்காணிப்பில் இன்றுமுதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான முறையில் எவரேனும் அடையாளம் காணப்பட்டால் உடனடியாக சீருடையுடன் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல்களை வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.