காவல்துறை சேவைக்கு ஷானி அபேசேகர மீண்டும் நியமனம்!

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை மீண்டும்  காவல்துறை சேவைக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க  காவல்துறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இது நேற்று (10) முதல் ஒரு வருட காலத்திற்கு அமுலுக்கு வந்துள்ளது.

இலங்கையில் பல சர்ச்சைக்குரிய குற்றங்களுக்குப் பொறுப்பாக இருந்த விசாரணை அதிகாரியாக, ஷானி அபேசேகர அறியப்படுகிறார்.

பிரபல துப்பறியும் நபரான இவர், குற்றப் புலனாய்வுத் துறையின் பணிப்பாளராகவும் சேவையாற்றியவர்.

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை, கொழும்பை சுற்றி 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை, பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு போன்ற விசாரணைகள் ஷானி அபேசேகரவின் மேற்பார்வையில் இடம்பெற்றன.

அந்த சம்பவங்களுக்கு மேலதிகமாக, ஷானி அபேசேகர, ரோயல் பார்க் கொலை, அங்குலான இரட்டைக் கொலை, உடதலவின்ன கொலை, மொஹமட் சியாம் கொலை போன்ற பல சர்ச்சைக்குரிய கொலைகளின் விசாரணையில் ஈடுபட்ட அதிகாரியாகவும் அறியப்படுகிறார்.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில்,  நாட்டில் இதுவரையில் இடம்பெற்ற குற்றச் செயல்களை ஆராய்ந்து குற்றவாளிகளை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்துவது ஷானி அபேசேகரவின் பணியாக உள்ளது.