ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பால் இலங்கைக்கும் ஆபத்து வரலாம் – எச்சரிக்கிறாா் சரத் வீரசேகர

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களையும், இந்துக்களையும் படுகொலை செய்வதற்காகவே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த 4 இலங்கை முஸ்லிம்கள் கடந்த 18 ஆம் திகதி இந்தியாவுக்கு சென்றுள்ளார்கள். எனவே இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும்.இல்லையேல் இலங்கையிலும் எதிர்காலத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை போன்ற அடிப்படைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதனை தடுக்க முடியாதென தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பி.யுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை எதிர்க்கட்சியினால் பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பி.யுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர உரையாற்றிக் கொண்டிருந்த போது, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான காவிந்த ஜயவர்தன,எழுந்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த நான்கு இலங்கை முஸ்லிம்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் தாக்குதல்களை நடத்த இவர்கள் அங்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஆகவே அடிப்படைவாத செயற்பாடுகள் குறித்து மீண்டும் அச்சம் எழுந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ற என்று கேள்வியெழுப்பினார்.

இதற்கு சரத் வீரசேகர மேலும் பதிலளிக்கும் போது, இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள 4 இலங்கை முஸ்லிம்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். மொஹமட் நுஸ்ரத், மொஹமட் நஃப்ரான்,மொஹமட் ரஸ்தீன், மொஹமட் ஃபரிஷ் ஆகிய நான்கு இலங்கை முஸ்லிம்கள் இந்தியாவில் அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் உறுப்பினர்களாவர். இவர்கள் இந்த மாதம் 18 ஆம் திகதி இந்தியாவுக்கு சென்றுள்ளார்கள். இவர்கள் 4 இலட்சம் ரூபாவுக்காக தாக்குதல்களை நடத்த சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களையும் , இந்துக்களையும் படுகொலை செய்வதற்காக இவர்கள் இந்தியாவுக்கு சென்றுள்ளதாகவும் 3 அல்லது நான்கு மாதங்களுக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பின் அடிப்படைவாத கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குழுக்கள் அறிக்கைகளை சமர்ப்பித்து பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளன. ஒருசில இஸ்லாமிய அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மதரஸா பாடசாலைகள் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளன” என்றாா்.