வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினரின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று (25) ஆரம்பமானது.
இப்போராட்டம் யாழ்ப்பாணம் செம்மணியில் இன்று காலை ஆரம்பமான நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்து நடத்தப்படவுள்ளது.
இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தியாகதீபம் திலீபனின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமான இந்தப் போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டுள்ளனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், நாட்டின் உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இன அழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் உள்ளிட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் முதலான விடயங்களில் நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் முதலான கோரிக்கைகளை இதன்போது முன்வைத்துள்ளனர்.