அதிகரிக்கும் எரிபொருள் நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிவாயு நெருக்கடி உள்ளிட்ட மேலும் சில பிரச்சினைகள் காரணமாக 65 சதவீதத்திற்கும் அதிகமான சிற்றுணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசிய சுயதொழில் புரிவோரின் வர்த்தக சங்கத்தின் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிவாயு நெருக்கடியின் காரணமாக விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தேநீர், பால் தேநீர் என்பனவற்றின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முட்டை ரொட்டி மற்றும் தோசை என்பனவற்றின் விலை 100 ரூபாவாக அதிகரித்துள்ளது.
பரோட்டாவின் விலை 50 ரூபாவாக உயர்வடைந்துள்ளதென சிற்றுணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கறியுடன் முட்டை ரொட்டி ஒன்றின் விலை 150 ரூபாவாகவும், கறியுடன் 3 பரோட்டாவின் விலை 200 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கறியுடன் அரை இறாத்தல் பாணின் விலை 170 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
றோல்ஸ், பெட்டிஸ், மரக்கறி ரொட்டி, முட்டை பனிஸ் மற்றும் சீனி சம்பல் பனிஸ் உள்ளிட்ட சிற்றுணடிகளின் விலை 100 ரூபா வரையில் அதிகரிக்க சிற்றுணவக உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, அப்பம் ஒன்றின் விலை 50 ரூபாவாகவும், முட்டை அப்பத்தின் விலை 100 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேநீரின் விலை 50 ரூபாவாகவும், பால் தேநீரின் விலை 100 ரூபாவாகவும் உயர்வடைந்துள்ளது.