இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தம்மை இடைநிறுத்தி கட்சி எடுத்த முடிவுக்கு, இடைக்காலத் தடை விதிக்குமாறு வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் இராஜேந்திரம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினரான இராஜேந்திரம் கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக, சபை அமர்வில் நடந்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
அதற்காக அவரிடம் விளக்கம் கோரியும், அவரைக் கட்சியில் இருந்து இடைநிறுத்தியும் கட்சியின் பொதுச்செயலாளரால் அவருக்கு அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் கட்சியின் முடிவை இரத்துச் செய்ய உத்தரவிடக் கோரியும், அந்த முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வலியுறுத்தியும், இதுபோன்ற கட்சியின் இடைநிறுத்தல் முடிவுகளை பகிரங்கப்படுத்தக் கூடாது என்ற வழிகாட்டுதல் பணிப்புரையை வழங்குமாறும் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
பிரதேச சபைத் தவிசாளர், உப தவிசாளர் தேர்வு தொடர்பான கட்சியின் நிலைப்பாடு தமக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.எனினும் மனுதாரரிடம் விளக்கம் கோரி தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுப்பிய கடிதத்தில், அந்த விடயம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது என்பதை நீதிமன்றம் தமது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், வழக்கின் பிரதிவாதிகளான இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் இந்த வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.