கொழும்பு துறைமுக வளாகத்தில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெரிய புதைகுழிகள் குறித்து உடனடி மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று மக்கள் போராட்ட முன்னணி கோரியுள்ளது.
துறைமுகப் பகுதியில் எலும்புக்கூடு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அறிக்கைகள் வெளியாகியதைத் தொடர்ந்து, அந்த அமைப்பினரின் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வ தகவல்களைப் பெற நீதி அமைச்சிற்குச் சென்றனர்.
அதன் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மற்றும் சட்டத்தரணி நுவன் போபகே, இந்தக் கண்டுபிடிப்புகள் இலங்கையின் நீண்டகால காணாமல் போனோர் பிரச்சினை மற்றும் அரச வன்முறைகளின் கருமை நிறைந்த வரலாற்றை மீண்டும் நினைவூட்டுவதாக கூறினார்.
1971, 1988–89 கிளர்ச்சிக் காலங்களில் ஆயிரக்கணக்கானோர் பலவந்தமாக காணாமல் போனதாகவும், வட மாகாணத்தில் மட்டும் 12,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு துறைமுகத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளின் அடையாளம், அவர்கள் எந்த சூழ்நிலையில் உயிரிழந்தனர், பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் உள்ளிட்ட கேள்விகளுக்குப் பதில் தேவைப்படுவதாக மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது.
இந்த எச்சங்கள் கடந்த காலத்தில் காணாமல் போன ஜே.வி.பி. உறுப்பினர்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது. அரசாங்கம் உடனடியாக சுதந்திரமான, முழுமையான விசாரணையை மேற்கொண்டு உண்மையை பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.



