பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றியபோது, ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிடமிருந்து கிடைத்த கோரிக்கைகள் இரண்டையும் இலங்கை நிராகரித்துள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, ஈரானின் மூன்று கப்பல்கள் “நல்லெண்ண விஜயம்” மேற்கொண்டு இலங்கை துறைமுகங்களுக்கு வர அனுமதி கோரியிருந்தன. அதேவேளை, அமெரிக்கா தனது இரு போர் விமானங்களை மத்தள விமான நிலையம் பகுதியில் தரையிறக்க அனுமதி கோரியிருந்தது.
இந்த இரு கோரிக்கைகளையும் இலங்கை அரசு நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
“இரு தரப்பினரின் கோரிக்கைகளையும் மறுத்ததன் மூலம், இலங்கை தனது நடுநிலை வெளிநாட்டு கொள்கையை உறுதியாக பேணியுள்ளது,” என அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பதற்ற நிலைமைகளின் பின்னணியில், எந்த ஒரு நாட்டின் சார்பாகவும் செயல்படாமல், இலங்கை தனது நிலப்பரப்பு, வான்வழி மற்றும் கடற்பரப்பை யாருக்கும் பயன்படுத்த அனுமதிக்காது என்பதே அரசின் நிலைப்பாடாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், உலக அரசியல் மோதல்களில் இலங்கை ஈடுபடாமல், சமநிலையான மற்றும் சுயாதீனமான வெளிநாட்டு கொள்கையை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உருவாகியுள்ள பதற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில், இலங்கையின் இந்த நடுநிலை அணுகுமுறை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.



