வன்னிப்பாடசாலைகளில் உள்ள வளக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பாடசாலைகளுக்கான வளங்களைப் பகிரும்போது அனைத்துப் பாடசாலைகளுக்கும் வளங்களை சமமாகப் பகிருமாறும் கோரிக்கைவிடுத்துள்ளார்.
பாராளுமன்றில் சர்வதேச இறையாண்மை பிணைமுறி மறுசீரமைப்புதொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையிற்றும்போதே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பாடசாலைகளுக்கு வளங்கள் சமச்சீராக (equity) பகிரப்படவேண்டும். இன்னமும் வன்னிமாவட்டத்தின் பலபாடசாலைகளில் இலத்திரனியல் மயப்பட்ட வளநிரப்பல் போதுமான அளவில் இல்லை. வன்னியில் முல்லைத்தீவு மற்றும், மன்னார் வலயங்களில் கணனி வளநிலையம் இல்லை. பாடசாலைகளில் கல்விசாரா ஊழியர்களாக சுகாதாரப் பணியாளர்கள் போதுமான அளவில் இல்லை. பாடசாலைப் பணியாளர், இரவுநேரக் காவலாளி போன்றோருக்குமான தேவைகள் உள்ளன. குறிப்பாக வன்னியில் போதுமான நிதியிடல் இல்லை. இன்றளவும் முல்லைத்தீவு கல்விவலயத்தில் ஒரு கணனியுடன் இயங்கும் பாடசாலைகள் உள்ளன.
அதேவேளை மாணவர்களிடையே விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் வகையிலான முழுமையான வளங்கள் வழங்கப்படவேண்டும். இந் நிலையில் மன்னார் மாவட்டத்தில் தோட்டவெளி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவி அன்ரன் ஜேசுதாசன் யதுர்சிகா பாடசாலைமட்டத் தேசிய மெய்வல்லுனர்போட்டியில் மகளிருக்கான ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ளார். அதேவேளை முல்வைத்தீவு, கற்சிலைமடு பண்டாரவன்னியன் மகாவித்தியாலய மாணவி சுபாஸ்கரன் பவித்திரா தேசியரீதியிலான மல்யுத்தப்போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
அதேபோல் முல்லைத்தீவுமாவட்டத்தைச் சேர்ந்த பத்துமாணவர்கள் தேசிய ரீதியிலான மல்யுத்தப்போட்டியில் பதக்கங்களையும் பெற்றுள்ளனர். அத்தோடு முல்லைத்தீவு வள்ளிபுனம் மகாவித்தியாலய மாணவன் ரதீஸ் சந்தோஷ், தேசியரீதியிலான குண்டுதள்ளுதல் போட்டியில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளார். இவர்களைப் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் என்றவகையில் நான் பாராட்டி வாழ்த்துகின்றேன். இவ்வாறு வன்னியைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய ரீதியில் போட்டியிட்டு தங்கங்களையும், ஏனைய பதக்கங்களையும் பெறுகின்றபோதும், அந்த மாணவர்களுக்கும் பாரிய தேவைப்பாடுகள் இருக்கின்றன. குறிப்பாக பயிற்றுவிப்பாளர்கள் போதாமை, பயிற்சி செய்வதற்கான முறையான மைதானங்கள் இன்மை, பயிற்றுவிப்பிற்கான உபகரணங்கள் இன்மை என பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. எனவே இது தொடர்பான விளையாட்டுத்துறை அமைச்சு இந்த விடயங்களில் கவனம் செலுத்தவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.