பாதுகாப்பு அமைச்சுக்கான அதிக ஒதுக்கீடு குறித்து பாராளுமன்றில் கேள்வி

யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள்  முடிவடைந்துள்ள  நிலையிலும் பாதுகாப்பு அமைச்சுக்கு  வரவு செலவுத் திட்டத்தில்  10.26 வீத நிதியை ஒதுக்கியுள்ளமையை  எப்படி நியாயப்படுத்த முடியும் என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த அமைச்சுக்கு பெருந்தொகையான நிதியை ஒதுக்கிடுவது நாட்டின் சமாதானத்தையோ,  பொருளாதார அபிவிருத்தியையோ உறுதிப்படுத்த எந்த வகையிலும் பங்களிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற  2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சுதந்திரமடைந்த போது இலங்கையின் பொருளாதார குறிகாட்டியானது ஆசிய நாடுகளில் பல்வேறு நாடுகளை விடவும் மிகவும் சிறப்பாக இருந்தது. ஜப்பானுக்கு அடுத்த நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இலங்கை பின்பற்றிய தவறான அரசியல் பொருளாதார, கல்வி மற்றும் சமூக கொள்கைகளினால் பொருளாதாரத்திலும் சமூக விழுமியங்களிலும் பின்தள்ளப்பட்டு இனக் குழுக்களுக்கு இடையே முறுகல்கள் ஏற்படுத்தப்பட்டு இறுதியில் நாடு   வங்குரோத்து நிலையடைந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில்  அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரனை, வரி விதிப்புகள் மற்றும் வீண் விரயத்தை குறைத்தல், உள்ளாச பிரயாணிகளின் வருகை ஆகிய நடவடிக்கைகள் மூலம் வருமானங்களை பெற்று நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவுக்கு உறுதி நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இதனை தக்க வைப்பதற்கு தொடர்ச்சியான இறுக்கமான நிதி நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.

அத்துடன் நாட்டை மீள கட்டியெழுப்பும் அரசியல், பொருளாதார, கல்வி கொள்கைகளை வகுக்க வேண்டிய பொறுப்பும் அரசாங்கத்திற்கு இருக்கின்றது.  இதுவே நாட்டின் எதிர்கால போக்கை எதிர்வு கூறும், நாட்டின் சமானத்திற்கான அடிப்படையாகும்‌ என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் முக்கியமான அமைச்சுகள் சில தவறவிடப்பட்டுள்ளன. கல்வி அமைச்சு, விவசாயம், காணி, நீர்பாசன உள்ளிட்ட அமைச்சுகளுக்கு பெரிய தொகைகள் ஒதுக்கப்படவில்லை.
ஆனால் போர் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்தும் பாதுகாப்பு அமைச்சுக்கு மிகவும் பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது 455 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இது மொத்த வரவு செலவுத் திட்டத்தில் 10.26 வீதமாகும். இந்த ஒதுக்கீட்டை எந்தளவில் நியாயப்படுத்த முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பாரிய ஒதுக்கீடு இந்த நாட்டின் சமாதானத்தையோ, நாட்டின் பொருளாதார அபிவிருத்தியையோ ஏற்படுத்த எந்த வகையிலும் பங்களிக்கப் போவதில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.