மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பழைய முறையில் தேர்தலை நடத்துவதா என்று ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் ஏற்கனவே எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “வளமான நாடு அழகான வாழ்க்கை’’ என்ற கொள்கைப் பிரகடனத்தில் 194ஆவது பக்கத்தில் புதிய அரசியலமைப்பு வரைபு தயாரிக்கப்பட்டு, அது மக்களிடம் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடல்களுடன் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு சர்வஜன வாக்கெடுப்பில் நிறைவேற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி செயற்படுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதன்படி இதற்கு முன்னர் அரசியலமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அமைக்கப்பட்ட குழுக்களின் அறிக்கை மற்றும் ஏனைய அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான யோசனைகள் ஆராயப்படுவதுடன், அது தொடர்பான ஆரம்பகட்ட யோசனை பத்திரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.



