மாகாண சபைகள் தேர்தல்கள் எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்வதற்கும், அது தொடர்பான விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கும் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் 12 உறுப்பினர்களை உள்ளடக்கிய விசேட செயற்குழு ஒன்றை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன நியமித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற அமர்வின் போது சபாநாயகர் இந்த அறிவிப்பை சபைக்கு விடுத்தார்.
அவர் மேலும் அறிவித்ததாவது,
மாகாண சபைகள் தேர்தல்கள் எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்வதற்கும், அது தொடர்பான விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கும் அண்மையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் இணை உறுப்பினர்களாக ஆளுங்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி அமைச்சர்களான சுனில் வட்டகல,முனீர் முழப்பர், அருன் ஹேமசந்திரா,மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷமன் நிபுணராச்சி,சமன்மலி குணசிங்க,தர்மபிரிய விஜேசிங்க,சந்தன சூரியராச்சி ஆகியோரும், எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.



