மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதென செய்திகள் வெளியாகியுள்ளது.
மாகாணசபைத் தேர்தலை அடுத்த வருடம் நடுப்பகுதியில் நடத்துவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், அந்நிலைமை தற்போது மாறியுள்ளதாக அறிய முடிகிறது.
இதற்கமைய தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நீண்ட காலமாக தாமதமாகி வந்த மாகாண சபைத் தேர்தலை மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள திடீர் முடிவின் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன எனக் கூறப்படுகின்றது.
அரசாங்கம் குறித்த விமர்சனங்கள் இருந்தாலும், அரசாங்கத்தை விட எதிர்க்கட்சிக்கு அதிக நற்பெயர் கிட்டவில்லை என்பது அரசாங்கத்தின் மதிப்பீடு. இது முதலாவது காரணம். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியால் முன்வைக்கப்பட்ட திட்டங்களின்படி, அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் அரசாங்கம் மிகவும் சிக்கலான, கடுமையான முடிவுகளை செயற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் என்பது இரண்டாவது காரணம்.
குறிப்பாக, அரசாங்கம் பல அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கவும், சிலவற்றை மூடவும், அரசு செலவினங்களை வெகுவாகக் குறைக்கவும் கட்டாயப்படுத்தப்படும்.
இந்தக் கொள்கைகளைச் செயல்படுத்துவது தவிர்க்க முடியாமல் இருக்கும் என்பதுடன், மக்கள் மத்தியில் கடும் எர்ப்பையும் தூண்டும் என்று அரசாங்கம் நம்புகிறது.
எனவே, புத்தாண்டுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி, ஏதாவது ஒரு வகையில் வெற்றியைப் பெற்று, பின்னர் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி நிலைமைகளின் கீழ் தேவைப்படும் கடுமையான பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது