இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (05) கைச்சாத்திடப்பட்டது. சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டம்  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் மெய்நிகர் ஊடாக  திறந்து வைக்கப்பட்டது.

அதே நேரம்  பிரதமர் மோடிக்கு  ‘இலங்கை மித்ர விபூஷண’ விருது வழங்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த இந்திய பிரதமர் மோடி ,

மீனவர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் நாம் முன்னேற வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறோம்.

அந்த வகையில் இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

2019 பயங்கரவாதத் தாக்குதல், கொவிட் தொற்று, சமீபத்திய பொருளாதார நெருக்கடி என ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் இலங்கை மக்களுடன் நாம் நின்றுள்ளோம்.

எமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையிலும், தொலைநோக்குப் பார்வையான ‘மகாசாகர்’ ஆகிய இரண்டிலும் இலங்கைக்கு சிறப்பு இடம் உண்டு என பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார்.