ஜனாதிபதித் தேர்தல்: இரண்டாவது நாளாக தொடரும் தபால் வாக்குப்பதிவு

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ம் தேதி நடக்கிறது.  இந்த  தேர்தலுக்கான தபால் மூல வாக்கு பதிவு நேற்றுத்தொடங்கி  இன்று (05) இரண்டாவது நாளாக நடைபெறுகின்றது.

தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று (04) ஆரம்பிக்கப்பட்டதுடன், மாவட்ட செயலக அலுவலக அதிகாரிகள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

நேற்று தபால் மூல வாக்களிப்பு காலை 8.30 இற்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணியளவில் வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தன.

இன்று (05) மற்றும் நாளை (06) முப்படைகளின் பணியாளர்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் ஊழியர்களும் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 1500 இற்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.