தேவையான நேரத்தில் உதவி: அதிபர் ட்ரம்புக்கு ஜனாதிபதி அநுரகுமார நன்றி தெரிவிப்பு

தேவையான நேரத்தில் இலங்கையுடன் துணைநின்றமைக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.

தித்வா சூறவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு பேரனர்த்தங்களை தொடர்ந்து இலங்கையில் அவசர நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவி அளிக்கும் முகமாக  அமெரிக்கா 2 மில்லியன் டொலர்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

அத்துடன்,  நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு அமெரிக்கா இரண்டு C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானங்களையும் அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில்,  C-130 விமானங்களை விரைவாகப் பணியில் ஈடுபடுத்தியமை மற்றும்  2 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிவாரண உதவி ஆகியவை, இரு நாடுகளுக்குமிடையிலான நீடித்த இருதரப்பு உறவுகளின் வலிமையை பிரதிபலிப்பதாகவும், அது பரஸ்பர ஜனநாயக விழுமியங்கள் மற்றும் நமது மக்களிடையே நெருங்கிய உறவுகளில் உறுதியாக வேரூன்றியுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.