பிரகீத் எக்னெலிகொட விவகாரம் : நீதியைக் கோரும் சந்தியா எக்னெலிகொட

சுயாதீன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் தற்போதைய நீதிமன்ற செயன்முறை ஆகியவற்றின்மீது தனக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாகவும், எனவே தற்போதைய அரசாங்கத்தின்மீது நம்பிக்கைவைத்து, விரைவாக நீதியை நிலைநாட்டுமாறு கோருவதாகவும் அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

சுயாதீன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை குறித்த நீதிமன்ற வழக்கு விசாரணைகள் இன்னமும் நிறைவடையாத நிலையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமைவாக பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்டதாக தன்னை முன்னாள் கடற்படை வீரர் என அடையாளப்படுத்தும் ஆர்.பி.டி.பி.பிரசன்ன பியசாந்த அண்மையில் ‘சுதா கிரியேஷன்ஸ்’ எனும் தனியார் யூடியூப் தளத்துக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து நீண்டகாலமாக நீதியைக்கோரி போராடிவரும் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவிடம் வினவியபோது, அவர் தான் அந்த நேர்காணலைப் பார்வையிடவில்லை என பதிலளித்தார்.

‘பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த 2015 ஆம் ஆண்டின் பின்னர் குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் மிகச்சிறப்பான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அவ்விசாரணைகள் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது. அவற்றின் அடிப்படையில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

அவ்வாறிருக்கையில், அவ்வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தி, நீதியை நிலைநாட்டுமாறு அரசாங்கத்திடமும், உரிய அதிகாரிகளிடமும் என்னால் கோரமுடியுமே தவிர வேறு எதனையும் செய்யமுடியாது’ என்றும் சந்தியா எக்னெலிகொட தெரிவித்தார்.