சீரற்ற கால நிலையால் சேதமடைந்த பாடசாலைகளை மீட்டெடுக்க “பிரதிஷ்டா” திட்டத்தை கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், குழு அல்லது தனிநபர் ஒருவர் சேதமடைந்த பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்ப பங்களிக்க முடியும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கல்வி அமைச்சின் மூலம் தேவையான அனைத்து ஒருங்கிணைப்புகளையும் மேற்கொள்ள திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் தகவல்களைத் தேடுவோர் அல்லது பங்களிக்க விரும்புவோர் , 07765 823 65 மற்றும் 071 99 323 25 ஆகிய இரண்டு குறிப்பிட்ட வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கங்களுடனும் 1988 என்ற பிரத்யேக ஹாட்லைன் தொலைபேசி இலக்கங்களுடனும் தொடர்புக்கொள்ள முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் கல்வி அமைச்சின் பேரிடர் மேலாண்மைக் குழுவால் ஒருங்கிணைக்கப்படும். நாடு முழுவதும் 1506 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் வடக்கு மாகாணத்தில் மிகக் கடுமையான சேதம் பதிவாகியுள்துடன் அங்கு 330 பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேற்கு மாகாணத்திலும் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் பதிவாகியுள்ளன,அங்கு 266 பாடசாலைகள் சேதமடைந்துள்ளன.
கிழக்கு மாகாணத்தில் 221 பாடசாலைகள் சேதமடைந்துள்ளன, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் ஒவ்வொன்றும் 136 பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. மேலும், ஊவா மாகாணத்தில் 129 பாடசாலைகளும் சபரகமுவ மாகாணத்தில் 115 பாடசலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்தப் பட்டியல் மேலும் புதுப்பிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டு பாடசாலைகளும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.



