தெற்கில் அருட்தந்தையைத் தாக்கிய காவல்துறை அதிகாரிகள் கைது

உந்துருளியில் பயணித்த கத்தோலிக்க அருட்தந்தை ஒருவரை தாக்கியதாக கூறப்படும் கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் போக்குவரத்து கண்காணிப்பு பிரிவைச் சேர்ந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் நேற்று (25) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதவிர மேலும் 6 காவல்துறை உத்தியோகத்தர்களும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கத்தோலிக்கப் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள கொட்டதெனியாவயில் உள்ள ஒரு பண்ணையில் உதவி தோட்ட நிர்வாகியாகப் பணிபுரியும் அருட்தந்தை, திப்பிட்டிகொட தேவாலயத்தில் வழிபாட்டை நடத்திவிட்டுத் திரும்பும் போதே தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தின் போது குறித்த அருட்தந்தையை உந்துருளி போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர் அவர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள்பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.