ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இயங்கிவரும் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தினால் இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் கடந்த செப்டெம்பர் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தமாக 112,348 ஆவணங்கள் திரட்டப்பட்டுள்ளன.
அவற்றில் 7,459 ஆவணங்கள் திறந்த மூலங்களில் இருந்து கிடைக்கப்பெற்றவையும், 104,889 ஆவணங்கள் இரகசிய மூலங்களில் இருந்து கிடைக்கப்பெற்றவையும் ஆகும். இந்த ஆவணங்கள் அனைத்தும் மிகப்பாதுகாப்பான டிஜிட்டல் கட்டமைப்பின் ஊடாகப் பேணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் மீறல்களுக்கான பொறுப்பாளிகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருப்பதாக இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2021ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் ‘இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டம்’ எனும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இச்செயற்திட்டத்தின் ஓரங்கமாக இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, உரியவாறு மதிப்பீடு செய்யப்பட்டு, சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழான வழக்குத்தொடரல் தேவைப்பாடுகளுக்காக உரியவாறு களஞ்சியப்படுத்தப்பட்டு வருகின்றன.