மட்டக்களப்பில் அகற்றப்பட்ட தொல்பொருள் பெயர் பலகையை மீண்டும் வைக்க உத்தரவு

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் அகற்றப்பட்ட தொல்பொருள் திணைக்களத்தின் பெயர் பலகைகளை மீண்டும் ஸ்தாபிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொல்பொருள் பெயர் பலகைகளை அகற்றிய சம்பவத்துடன் தொடர்புடைய வாழைச்சேனை, கோரளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட 05 பேருக்கு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தால் பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன் மற்றும் பிரதி தவிசாளர், இரண்டு உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் இன்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

கடந்த 22ஆம் திகதி வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுகளில் தொல்பொருள் திணைக்களத்தினால் தொல்பொருள் இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்கு பெயர்பலகைகள் பொருத்தப்பட்டிருந்தன.

வாழைச்சேனை பிரதேசசபைக்குட்பட்ட வீதிகளில் தங்களது அனுமதிகள் பெறப்படாமல் குறித்த பெயர்ப்பலகைகள் இடப்பட்டதாக தெரிவித்து வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளரினால் குறித்த பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டன.

இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தினால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையிலும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய உத்தரவுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் வாழைச்சேனை பிரதேசபைக்குள் இருந்த தொல்பொருள் இடங்களைக் குறிக்கும் பெயர்ப்பலகைகளை வாழைச்சேனை பொலிஸார் கைப்பற்றியதுடன் அது தொடர்பில் ஒருவரை கைதுசெய்திருந்தனர்.

இது தொடர்பில் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர் இருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் இன்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் நால்வரும் முன்னிலையாகினர்.

இன்றைய தினம் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் பொருத்தமற்ற குற்றச்சாட்டுகள் என்று நீதிமன்றின் கவனத்திற்கு சட்டத்தரணி சுமந்திரனால் கொண்டுசெல்லப்பட்டதுடன் 1987ஆம் ஆண்டு 15ஆம் இலக்க பிரதேசசபை சட்டத்தின் கீழ் பொதுவழிகள் சட்டம் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டது.

வீதிகள் தொடர்பான அதிகாரங்கள் பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதேசசபை தவிசாளர் அந்த சட்டத்தின் கீழ் அதிகாரமுடையவர். அந்த அதிகாரத்தின் கீழ் செய்யப்பட்ட விடயத்தினை எக்காலத்திலும் குற்றச்சாட்டாக முன்வைக்க முடியாது.

அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் அதனை அவர் செய்துள்ளார் என்பதை சுமந்திரன் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார். அத்துடன் உள்ளுராட்சிமன்றங்களின் அனுமதியைப் பெற்றே பெயர்ப்பலகை இடப்படவேண்டும் என்பதை நீதிமன்றின் கவனத்திற்கு சட்டத்தரணியினால் கொண்டுவரப்பட்டபோது அதனை தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.

எதிர்காலத்தில் முறையான அனுமதியைப் பெற்றுக்கொள்வதாகவும் எதிர்காலத்தில் முறையாக அனுமதி கோரும்போது அதனை சபையில் சமர்ப்பித்து சபையினால் முறையான அனுமதியை வழங்கமுடியும் என்றும் அவர் வாதிட்டார். இதேவேளை, எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் பிரதேச சபையின் முறையான அனுமதிபெறப்பட்டு பெயர்ப்பலகையிடும் பணிகள் நடைபெற்று இது தொடர்பான பிரச்சினை முடிவுறுத்தப்படுமானால் எதிர்வரும் 15ஆம் திகதி இந்த வழக்கு முடிவுக்கு வரும் என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்தார்.