இலங்கைக் கடற்பரப்பில் அண்மையில் இடம்பெற்ற ஈரானிய கப்பல் மீதான தாக்குதல் குறித்த விவாதங்கள் தற்போது சர்வதேச மட்டத்தில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இலங்கையில் தங்கவைக்கப்பட்டுள்ள ஈரானிய படையினரை மீண்டும் தாயகம் அனுப்புவது குறித்து தீர்மானிக்கப்பட வில்லை என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், இலங்கையின் ஆழ்கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய கப்பல் ஒன்று இலக்கு வைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளானது. இதனை தொடர்ந்து மற்றுமொரு ஈரானிய கப்பலில் இருந்த அந்நாட்டு கடற்படையினரை பாதுகாப்பாக மீட்டு திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.
அவர்களை மீண்டும் ஈரானுக்கு அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்திருந்த நிலையில், இலங்கையில் ஈரானியப் படையினர் தங்கியிருப்பது குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இவ்வாறானதொரு நிலையில் இந்த ஈரானியப் படையினரை மீண்டும் அவர்களது நாட்டிற்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என வினவப்பட்டபோது, ‘இல்லை’ என வெளிவிவகார அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்தது.
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான முறுகல் நிலை காரணமாக, இலங்கையில் ஈரானிய கடற்படையினரின் இருப்பு சர்வதேச இராஜதந்திர மட்டத்தில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.
குறிப்பாக, இலங்கைக் கடற்பரப்பில் இடம்பெற்ற கப்பல் தாக்குதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு இறையாண்மை குறித்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



