எந்தவொரு கொடுப்பனவும் அதிகரிக்கப்பட மாட்டாது : ஜனாதிபதி

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு சம்பள உயர்வு வரும் வரை, வேறு எந்தவொரு கொடுப்பனவும் அதிகரிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றும் கண்டி மாவட்ட வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். இந்த நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று காலை மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, 2025, 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக 33,000 கோடி (330 பில்லியன்) ரூபா செலவிடப்படுவதாகக் குறிப்பிட்டார்.

அதற்கமைய, 2027 ஆம் ஆண்டில் மூன்றாவது சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்ட பின்னர், வரவு செலவுத் திட்டத்தில் ஏற்படும் தாக்கத்தைக் கருத்திற்கொண்டே ஏனைய கொடுப்பனவுகள் குறித்துப் பரிசீலிக்கப்படும் எனவும், அதுவரை யார் என்ன போராட்டங்களை முன்னெடுத்தாலும் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.