அம்பாறை மாவட்டம்,நிந்தவூர் பிரதேச சபையினுள் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு ஒன்று உள்நுழைந்து பிரதி தவிசாளர் உட்பட இருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகிய நிலையில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 24 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று புதன்கிழமை (10) உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை தலைமறைவாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் உட்பட 10 பேரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேச சபையின் தவிசாளர் அண்மையில் பதவி விலக்கப்பட்டார். இந்த நிலையில் பிரதி தவிசாளர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த சட்டத்தரணி எம்.ஐ . இர்பான் சபை நடவடிக்கையினை மேற்கொண்டு வந்துள்ளார்.
சம்பவ தினம் திங்கட்கிழமை பகல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் பிரதித் தவிசாளர் அறையில் உள்நுழைந்து சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என தெரிவித்து பிரதித் தவிசாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அங்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.
அங்கு சென்ற காவல்துறையினர் இது நிர்வாக ரீதியான பிரச்சினை எனவே கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற பிரதிப் பணிப்பாளரிடம் முறையிட்டு இதற்கான தீர்வை பெறுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியதையடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
இதனை தொடர்ந்து பிரதி தவிசாளர் தனது சபை கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பிற்பகல் 2.00 மணியளவில் பிரதி தவிசாளரின் காரியாலயத்துக்குள் அத்து மீறி உள் நுழைந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தலைமையிலான 30 பேர் கொண்ட குழு மேசையில் இருந்த பொருட்களை உடைத்து எறிந்து பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியதில் இருவரும் காயமடைந்ததையடுத்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ள நிலையில் இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட 12 பேரை அடையாளம் கண்டு அவர்களை கைதுசெய்ய நடவடிக்கையினை மேற்கொண்டு வந்த நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
இதனை தொடர்ந்து தலைமறைவாகிய இருவரை நேற்று இரவு காவல்துறையினர் கைதுசெய்தனர். இதில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவன் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இருவரையும் எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை தலைமறைவாகியுள்ளவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் பாராளுமன்ற உறுப்பினரை கைதுசெய்வதற்கு பாராளுமன்ற சபாநாயகரிடம் அனுமதியை பெறும் நடவடிக்கையின் முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



