இலங்கை – இந்திய அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் பருத்தித்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக பெங்களூரிலிருந்து வருகை தந்துள்ள, இந்தியாவின் மீன்பிடித்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மீன்வளத்துக்கான மத்திய கடலோர பொறியியல் நிறுவனத்தினர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை ஆளுநர் செயலகத்தில் திங்கட்கிழமை மாலை சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பில் இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளியும் கலந்து கொண்டார்.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் முல்லைத்தீவுக்கு மே மாதம் வருகை தந்திருந்தபோது பருத்தித்துறை துறைமுகம் இந்திய நிதியுதவியில் அபிவிருத்தி செய்யப்படும் என்று உறுதியளித்ததை ஆளுநர் நினைவுகூர்ந்தார்.
மேலும், பருத்தித்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை ஆளுநர் தெரிவித்ததுடன் , இந்தத் திட்டமுன்னெடுப்புக்கான மாகாணத்தின் ஒத்துழைப்பு முழுமையாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
மீன்வளத்துக்கான மத்திய கடலோர பொறியியல் நிறுவனத்தின் இயக்குநர் தமது தொழில்நுட்ப மதிப்பீடு தொடர்பான விடயங்களை முன்வைத்ததுடன் கடந்த காலங்களில் இந்தத் திட்டத்துக்காக தயாரிக்கப்பட்ட வடிவமைப்பு அதிலிருந்து தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள சில விடயங்கள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.
இதேவேளை, இலங்கை மீன்பிடி அமைச்சிலிருந்து இந்தத் திட்டம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கரிசனை தொடர்பிலும் அவர் கூடுதல் கவனம் செலுத்தினார்.
மேலும் திட்டத்துடன் தொடர்புடைய திணைக்களங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளவேண்டிய அனுமதிகள் தொடர்பாகவும், கடந்த காலங்களில் பெற்றுக் கொள்ளப்பட்ட அனுமதிகளை புதிப்பித்துக் கொள்வது தொடர்பாகவும் அவர் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
பருத்தித்துறை துறைமுகத்தை இந்தக் குழுவினர் நேரில் சென்று பார்வையிடவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை கடற்றொழில் அமைச்சரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பருத்தித்துறை துறைமுகத்துடன் தொடர்புடைய சமூக அமைப்புக்களின் கருத்துக்களை உள்வாங்கி எதிர்கால திட்டங்களை முன்னெடுக்குமாறும் ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கினார்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், இந்தியத் தூதுக் குழுவினர், கடற்றொழில் அமைச்சு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.